Namanai Anjom/நமனை அஞ்சோம் - Charu Nivedita/சாரு நிவேதிதா
தமிழின் ஆதி கவிகளான சித்தர்கள் பிண்டத்தை (human body) அண்டத்திலும் (cosmos) அண்டத்தைப் பிண்டத்திலும் கண்டவர்கள். இந்தப் பேரண்டத்தையே தானாகவும் (self) தன்னையே பேரண்டமாகவும் காணும் நிலை அது. அப்படிக் கண்ட கவிஞன் இந்தப் பேரண்டத்தின் முன்னே நின்றபடி அதனோடு உரையாடிக் கொண்டிருக்கிறான். நட்சத்திரக் கூட்டங்களை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருக்கும் போது – ஆழ்கடலில் ஒரு கட்டுமரத்தில் சென்று கொண்டிருக்கும் போது – கண்களை மூடி வனத்தின் இசையைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது அல்லது ஒரு மெத்ரோ ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கும் போது எப்போது வேண்டுமானாலும் அந்த உரையாடல் நிகழலாம்.
அந்த உரையாடல் மனித சமூகத்தின் கலாச்சார, வரலாற்று ஞாபகங்களைத் தன் சுவாசமாகக் கொண்டிருக்கும் மொழி என்ற தளத்தில் நிகழ்வதால் கவிஞனுக்கும் மற்ற மனிதனுக்குமான உறவு ஏற்படுகிறது. இருந்தாலும் கவிஞன், தான் கையாளும் மொழியைப் படிமங்களாகிய அணுத்துகள்களாக மாற்றி விடுவதால் அந்த ரஸவாதம் (alchemy) அறியாத மனிதன் கவிஞனிடமிருந்து விலகிப் போகிறான்.
அப்படியின்றி கவிஞனின் உரையாடலைக் கேட்க நேரும் மனிதன் பாக்கியவான். அவன் கவிஞனைப் போலவே அண்டத்திலொரு பிண்டமாகத் தன்னை உணரத் துவங்குகிறான். அப்படி உணர்பவனால் ஆஷ்விட்ஸ்களை உருவாக்க முடியாது. அவன் இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துகளோடும் தன்னையே காண்பான்.
நூலிலிருந்து...